மாஜி தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் ரத்து.. ஓ.பன்னீர் செல்வம் அதிரடி!
மாஜி தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் அதிரடியாக இதைச் செய்துள்ளார்.
சென்னை: மாஜி தலைமைச் செயலாளர். கு.ஞானதேசிகன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் முயற்சிகள் நீண்ட நாட்களாகவே நடந்து வந்ததாக ஏற்கனவே நாம் செய்தி போட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஞானதேசிகன். இதன் பின்னணியில் வைகுண்டராஜன் பெயர் அடிபட்டது. வைகுண்டராஜனுக்கு எதிரான ஒரு பைலில் ஞானதேசிகன் கையெழுத்து போடாமல் இழுத்தடித்ததே சஸ்பெண்ட் ஆனதற்கு காரணம் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்தவர் கு.ஞானதேசிகன். 2016 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று, அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தமிழக தலைமைச் செயலராக இருந்த கு.ஞானதேசிகன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக (டிட்கோ) தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் நிலை செயலராக இருந்த பி.ராமமோகன ராவ் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் குறுகிய காலத்திலேயே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 2016ம் ஆண்டு மே மாதம் வரை கு.ஞானதேசிகன் தலைமைச் செயலராக இருந்தார். கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்பட்டதற்கு தலைமைச் செயலராக இருந்த ஞானதேசிகனின் செயல்பாடு பற்றியும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் அவர் முன்பு மின்வாரிய தலைவராக இருந்தபோது அவரது செயல்பாடுகளும் கூட சர்ச்சையாகின. இந்தப் பின்னணியில்தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வைக்க தற்போது சஸ்பென்சனில் உள்ள ராம்மோகன ராவ் மூலமாக முயற்சிகள் நடந்து வந்தன. ஆனால் அது நடக்காமல் இருந்து வந்தது. இதுகுறித்து ஒன்இந்தியா தமிழ் இணையதளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது ஞானதேசிகன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். அவர் தற்போது ராஜினாமா செய்து விட்டு பொறுப்பு முதல்வராக இருந்தாலும் கூட இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். கொள்கை ரீதியிலான முடிவுகளை மட்டுமே அவர் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனது அதிகாரத்தை அவர் சரியாக பயன்படுத்தி அதிரடி செய்துள்ளார் முதல்வர் ஓ.பி.எஸ்.
அதுல் ஆனந்த் சஸ்பென்சனும் ரத்து
இதேபோல ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுல் ஆனந்த் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்தவர் ஆவார்.