கொள்கையே இல்லாத தேமுதிகவில் இப்படி நடப்பது ஆச்சரியம் இல்லை... ஞாநி
சென்னை: கொள்கை அடிப்படையில் தேமுதிகவில் இணைந்தவர்கள் குறைவு. எனவே அக்கட்சியில் இப்படியெல்லாம் நடப்பதில் வியப்பே இல்லை என்று தேமுதிக அதிருப்தியாளர்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஞாநி சங்கரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
தே.மு.தி.க அதிருப்தியாளர்கள் தங்களைக் கேட்காமல் விஜய்காந்த் மக்கள் நலக் க்கூட்டணியுடன் சேர்ந்ததை எதிர்த்தும் தி.மு.கவுடன் சேராத அதிருப்தியை வெளிப்படுத்தியும் இன்று எழுப்பியிருக்கும் கலகம் திமுகவால் வழி நடத்தப்படுகிறது என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை.
மக்கள் நலக் கூட்டணியுடன் விஜய்காந்த் இணைந்து இத்தனை வாரங்கள் ஏன் சும்மா இருந்தார்கள்? இப்போது அதிமுக வேட்பாளர் பட்டியல் பற்றிய விவாதத்திலிருந்து கவனம் திருப்ப, இந்த நேரத்தை இந்தக் கலகத்துக்கு பயன்படுத்துவது தெளிவாக தெரிகிறது.
தேமுதிகவில் இப்படியெல்லாம் நடப்பதில் எந்த வியப்புக்கும் இடமில்லை. அதில் ஆரம்பத்திலிருந்தே கொள்கை அடிப்படையில் இணைந்தவர்கள் மிகக் குறைவு. அரசியல் பிழைப்புக்கு தமக்கான பதவிகள் திமுகவிலும் அதிமுகவிலும் கிடைக்க வாய்ப்பில்லாத சூழலில் புதுக் கட்சியில் எளிதாக இடங்களை அடையலாமென்று கணக்கிட்டு சேர்ந்தவர்களே அதிகம்.
அதனால்தான் சென்ற தேர்தலில் ஜெயித்த பின்னரும் எட்டு எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் ஓடிவிட்டார்கள். இப்போது இன்னும் சிலர் இப்படி தேர்தலுக்கு முன்பே ஓடுவதும் நல்லதுதான். திமுக, அதிமுக இரண்டிற்கும் செல்லக் கூடவே கூடாது என்று நினைப்போர் மட்டும் எஞ்சியிருந்தால் தேமுதிகவுக்குதான் நல்லது. கசடுகள் நீங்கி முன்பை விட செறிவான அமைப்பாக மாறும் வாய்ப்பேனும் ஏற்படும் என்று கூறியுள்ளார் ஞாநி.