மரக்கன்றுகளை நாசம் செய்த ஆடுகள் “அரெஸ்ட்”- 200 ரூபாய் அபராதம் கட்டியபின் விடுதலை!
திருப்பூர்: திருப்பூரில் மரக்கன்றுகளை மேய்ந்து நாசம் செய்த 60 ஆடுகளை கைது செய்து பின்னர் தலா ரூபாய் 200 அபராதம் கட்டியபின் விடுதலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசாமி கோயில் உள்ளது. அறுநூறு அடி உயரமுள்ள இந்த மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிவன்மலை ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து வேர்கள் அமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் முன்னிலையில் சுமார் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளை பாதுகாத்து, பராமரிக்கும் பொறுப்பை சிவன்மலை ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
தற்போது மூன்று அடி உயரம்வரை வளர்ந்துள்ள இந்த செடிகளை அந்த பகுதியில் சுற்றித்திரியும் ஆடுகள் மேய்ந்து சேதப்படுத்தி வருவதாக பொது மக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஜீவிதா ஜவகருக்கு புகார்கள் குவிந்தன. ஆடு மேய்க்கும் உரிமையாளர்களிடம் பலமுறை ஆடுகளை கட்டிவைத்து மேய்க்கும் படியும், மரக்கன்றுகளை கடிக்க விடவேண்டாம் என்றும் கூறிய போதும் அவர்கள் யாரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று மலையை சுற்றி நடப்பட்டுள்ள செடிகளை ஆடுகள் கூட்டம் கூட்டமாக மேய்வதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஊராட்சி பணியாளர்கள் அங்கு சென்று மரக்கன்றுகளை மேய்ந்துகொண்டிருந்த 60 ஆடுகளை ஓட்டி வந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அடைத்து வைத்தனர்.
மேலும், இதுபற்றி நடவடிக்கை எடுக்க காங்கேயம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு ப்பரிந்துரை செய்யப்பட்டது. அவரது, உத்தரவின் பேரில், மரக்கன்றுகளை கடித்து சேதப்படுத்திய ஒவ்வொரு ஆட்டிற்கும் ரூபாய் 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை செலுத்திய பின்னர் ஆடுகள் விடுவிக்கபட்டது. இனிமேலும் ஆடுகள் மரக்கன்றுகளை கடித்தால் அவற்றை பிடித்து இல்லத்தில் விடப்படும் என ஊராட்சிமன்ற தலைவர் ஜீவிதா ஜவகர் கூறியுள்ளார்.