கோவிலுக்கு குழி தோண்டிய இடத்தில் 3 பழமையான சாமி சிலைகள் கண்டுபிடிப்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தின் பொறையாறு பகுதியில் ஆலய கட்டுமானப் பணிகளுக்காக இன்று பள்ளம் தோண்டிய இடத்தில் இருந்து மூன்று பழங்கால சாமி சிலைகள் கிடைத்துள்ளன.
இங்குள்ள திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் விரிவாக்கப் பணிகளுக்காக இன்று கட்டுமான தொழிலாளர்கள் பள்ளம் தோண்டினர். அப்போது, சுமார் 8 அடி ஆழத்தில் இருந்து மூன்று பழங்கால சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
சுமார் 85 சென்டிமீட்டர் உயரம் கொண்ட பெருமாள் சிலை, தலா 67 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஸ்ரீதேவி- பூதேவி சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர் திருவிளையாட்டம் கிராம மக்கள்.
மேலும், இங்குள்ள பெருமாள் கோயில் சுமார் 800 ஆண்டுகால பழைமையானது. இதைவைத்துப் பார்க்கும்போது தற்போது கிடைத்துள்ள இந்த மூன்று சிலைகளும் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.