குழந்தையே வேண்டாம் பாஸ்: இப்படி சொல்வது நம் இந்திய பெண்கள் தான்
சென்னை: நவீன யுகத்தில் பல பெண்கள் குழந்தை பெறாமல் சுதந்திரமாக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு பெண்ணுக்கு திருமணம் நடந்தால் அடுத்தபடியாக அவர் எப்பொழுது தாயாவார் என்று தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் தற்போது உள்ள பெண்களில் பலர் அதிலும் குறிப்பாக மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்கள் குழந்தை பெற விரும்புவது இல்லை.
நாமே இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்கிறார்கள். குழந்தை பெற்றால் தாங்கள் வேலைக்கு செல்ல முடியாது, அப்படியே சென்றாலும் குழந்தை என்று இருந்தால் அது தங்களை கட்டிப்போடும் பந்தமாக இருப்பதாக கருதுகிறார்கள்.
குழந்தை பெறாமல் இருப்பதால் அதை நினைத்து வருத்தம் இல்லை. பெற்றால் தான் பிள்ளையா, உறவினர்களின் பிள்ளைகள் மீது பாசம் காட்டுவோம். அதனால் குழந்தைகள் இல்லை என்று தோன்றாது என்கிறார்கள்.
கூட்டு குடும்பம் என்ற முறை கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில் குழந்தை வேண்டாம் என்ற முடிவை கணவனும், மனைவியும் தான் எடுக்கிறார்கள். எங்களுக்கே நேரம் போதவில்லை இதில் குழந்தைக்கு எப்படி என்று கேட்கும் பெண்களை தற்போது பார்க்க முடிகிறது.
திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் இணையதளங்களில் விளம்பரம் செய்யும் பெண்களில் சிலர் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள். மாசு அதிகம் உள்ள, பாதுகாப்பற்ற உலகில் புதிய உயிரை வேறு கொண்டு வர வேண்டுமா என்று நினைப்பதாக சில பெண்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்யும் பெண்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் தான் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.