"ஷாக்"கில் கோகுல இந்திரா.. தினகரன் பக்கம் தாவுவாரா.. அதிமுகவில் புது பரபரப்பு!
Recommended Video
சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு நேற்று சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு விழா மேடையில் இடம் தரப்படவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். சீட் கேட்டு கெஞ்சியும் கூட சீட் தரப்படாததால் அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
ஜெயலலிதா காலத்தில் கோகுல இந்திராவை சிறப்பான இடத்தில் வைத்திருந்தார். மாநில அமைச்சர், எம்.பி பதவி, எம்.எல்.ஏ பதவி என சிறந்த இடத்தில் வைத்திருந்தார் ஜெயலலிதா. அதிமுக மகளிர் அணித் தலைவராகவும் இருந்தவர் கோகுல இந்திரா. ஆனால் தற்போது அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியுடன் மட்டும் வலம் வருகிறார்.
சசிகலாவின் ஆதரவாளராக இருந்தவர் கோகுல இந்திரா. தினகரனுக்கும் நெருக்கமானவர். இருவரும் எம்.பியாக இருந்தபோதே நல்ல நட்புடன் இருந்தவர்கள்தான். தற்போது அதிமுகவில் இருக்கிறார் கோகுல இந்திரா.
ஷாக் சம்பவம்
இந்த நிலையில் நேற்று கோகுல இந்திராவுக்கு அதிர்ச்சி நாளாக அமைந்தது. அதிமுக மேடையில் அவருக்கு ஒரு சீட் கூட தரப்படாமல் இறக்கி விடப்பட்டார். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான கோகுல இந்திரா விழாவிலிருந்தே பாதியில் வெளியேறினார்.
[பள்ளி, கல்லூரி பஸ்களில் அதிமுகவினர் பயணம்.. நந்தனத்துக்கு படையெடுத்த அரசு பஸ்கள்.. மக்கள் அவதி ]
நூற்றாண்டு விழா
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதற்காக கூடிய அதிமுகவினரால் சென்னை நகர போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிப் போனார்கள். இந்த விழாவில் கோகுல இந்திராவும் கலந்து கொண்டார்.
மேடையில் சீட் இல்லை
விழா மேடையில் முதல்வர், துணை முதல்வர், அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு இடம் தரப்பட்டிருந்தது. ஆனால் கோகுல இந்திரா மேடையில் ஏறியபோது உங்களுக்கு சீட் இல்லை என்று அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்தார் கோகுல இந்திரா. வாதாடிப் பார்த்தும், கெஞ்சிக் கேட்டும் கூட சீட் கிடைக்கவில்லை. இதனால் அவர் பாதியிலேயே விழாவிலிருந்து வெளியேறினார்.
தினகரன் பக்கம் போவாரா
தற்போது கோகுல இந்திரா அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியும் கோபமுமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அணி மாறக் கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. தினகரன் பக்கம் அவர் போகக் கூடும் என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலத்தில் நல்ல புலமை படைத்தவர் கோகுல இந்திரா. நன்றாக பேசக் கூடியவர். எனவே அவர் விலகினால் அதிமுக நல்ல பேச்சாளர் ஒருவரை இழக்க நேரிடும்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. கோகுல இந்திரா என்ன செய்யப் போகிறார்.. பொறுத்திருந்து பார்ப்போம்.