தென்காசி நகைக்கடையில் தங்க வளையல்கள் திருட்டு - சிசிடிவியில் பெண்கள் சிக்கினர்
தென்காசி நகைக்கடையில் 1இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வளையல்கள் திருடிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி : நகை வாங்குவது போல வந்து தங்க வளையல்களை ஆட்டையை போட்டுச்சென்ற பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர்,தென்காசி உள்ளிட்ட ஊர்களில் பிரபலமான நகைக்கடை கிளைகளை அமைத்து இயங்கிவருகிறது.
தென்காசி அம்மன் சன்னதி பகுதியிலும் அந்த நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் கடந்த 18ஆம் தேதி ஏராளமானவர்கள் குடும்பத்தோடு நகை எடுக்க வந்துள்ளனர். அப்போது டிப்டாப்பாக இரண்டு பெண்களும் நகை எடுக்க வந்துள்ளனர்.
நகை திருட்டு
அந்த பெண்கள் வந்த உடன் கடையின் ஊழியர் ஏராளமான வளையல்களை எடுத்து காட்டியுள்ளார்.பின்னர் அந்த பெண்கள் பல்வேறு மாடல்களை கேட்டு போட்டு பார்த்துவிட்டு மாடல்கள் பிடிக்கவில்லை வேண்டாம் என்று சொல்லி விட்டு அவர்கள் கடையை விட்டு திரும்பிவிட்டனர்.
2 செட் தங்க வளையல்
பின்னர் கடை ஊழியர்கள் இரவில் கணக்குபார்த்து தங்க சாமான்களை எண்ணிக்கொண்டு இருந்தபோது 1இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 செட் தங்க வளையல்களை காணவில்லை.
சிசிடிவி கேமராவில் சிக்கினர்
இதனைத்தொடர்ந்து கடை ஊழியர்கள் கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டபோது 2 பெண்களும் நகையை திருடி கை பைக்குள் வைப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
போலீசில் புகார்
இதைத் தொடர்ந்து தென்காசி காவல் நிலையத்தில் உடனடியாக புகார் செய்தனர். புகாரைத்தொடர்ந்து தென்காசி போலீசார் வழக்குபதிவு செய்து வளையல்களை திருடி சென்ற 2 பெண்களையும் தேடிவருகின்றனர்.