வாகன சோதனையில் 30 கிலோ தங்க கட்டிகள் சிக்கின.. வாக்காளர்களுக்குத் தர கடத்தல்?
நெல்லை: நெல்லை அருகே நடந்த தேர்தல் வாகன சோதனையில் 30 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சோதனை சாவடியில் ஏஎஸ்பி அருண் சக்தி குமார், டிஎஸ்பி மலைச்சாமி், இன்ஸ்பெக்டர் பிரதாபன், எஸ்ஐ தனலெட்சுமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து வந்த ஓரு லோடு வேனை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். வேனின் முன் புறத்தில் ஆன் பேங்க் டியூட்டி என்று எழுதப்பட்டிருந்தது.
விசாரணையில் அந்த வேன் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நகை கடைக்கு செல்வதாக அதிலிருந்த வேன் டிரைவர் மதுரையை சேர்ந்த குமார் கூறினார். வேனை சோதனையிட்ட போது அதில் பாளம், பாளமாக ஏராளமாக தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் மொத்த எடை 30 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.9 கோடியே 91 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரியான மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா தலைமையிலான அதிகாரிகள் சோதனை சாவடிக்கு விரைந்து வந்தனர். அவர்களும் டிரைவர் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் இருந்த ஆவணங்களையும், வேனில் இருந்த தங்க கட்டிகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தனர். அவர்களின் அறிவுரைப்படி நெல்லை தாலுகா அலுவலகத்திற்கு தங்க கட்டிகளுடன் வேன் கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் பார்வையாளர்கள் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். 30 கிலோ தங்க கட்டிகளுக்கும் முறையாக ஆவணம் உள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.