தஞ்சை அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம்- ஊக்க தொகை!
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை: அரசின் கையிலேயே இருந்து செயல்படக்கூடிய கல்வித்துறை இன்று தனியாரிடம் மண்டியிட்டு கிடக்கிறது. இதனால், பிள்ளைகளின்மேல் பெற்றோர்கள் வைக்கின்ற பாசம் பணமாக வசூலிக்கப்பட்டு, லட்சங்களும், கோடிகளும் புரளும் வணிகதுறையாக இன்று கல்வித்துறை உருமாறி நிற்கிறது. அதேசமயம் தனியார் பள்ளியின் அசுரத்திற்கு ஏற்றார்போல் அரசு பள்ளியும் அதல பாதாளத்தில் சென்று கொண்டுள்ளதையும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
அரசு பள்ளிகளின் வசதி வாய்ப்புகளும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், மாணவர் எண்ணிக்கையோ ஆண்டுக்காண்டு சரிந்துகொண்டுதான் செல்கிறது. இதற்கு காரணம் அரசு பள்ளியில் படிக்க வைப்பதை பெற்றோர் கவுரவ குறைச்சலாக நினைப்பதால்தான். ஏன், அரசு ஊழியரின் குழந்தை கூட அரசு பள்ளியில் படிப்பதில்லை.
படிக்க வைக்க வசதி இல்லாதோர், படிக்க ஆர்வமில்லாதோர், ஆசிரியர்களிடம் எந்த கேள்வியும் கேட்காத பிள்ளைகளே அரசு பள்ளியில் பெரும்பாலும் படித்து வருகின்றனர். இதனால் ஆசிரியர்களும் கற்பித்தலில் அதிக அக்கறை காட்டுவதில்லை என் குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது. எனினும் ஒரு சில அரசு பள்ளிகளே தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வந்ததை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ளநிலையில், சரிவை சரக்கட்டி, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டிய பொறுப்பு கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக, சீர் கொடுத்து அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைப்பது என்ற முதல் அடியை ஆசிரியர்கள் எடுத்து வைத்தார்கள். பல மாவட்டங்களில் சீருடை, பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை சீர்வரிசையாக பெற்றோர்களிடம் கொடுத்து பிள்ளைகளை பள்ளியில் சேர்க்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இது பெருமளவு அனைத்து பெற்றோரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதன் அடுத்த முயற்சியாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தஞ்சை மாவட்டம் முன்னெடுத்துள்ளது. திருச்சிற்றம்பலம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியே இதற்கான புது யுக்தியை கையிலெடுத்து உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு என்ன செய்வது என பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடி முடிவெடுத்தது.
அதன்படி, நேற்று நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஒருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், இந்த வருடம் முதல் பள்ளியில் சேர்ந்த 1-ம் வகுப்பு முதல் 8-ம் வரை சேர்ந்த 15 மாணவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அசத்தினர். அத்துடன் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ரூ.1000 ஊக்கப்பரிசும் வழங்கினர்.
சுண்டியிழுக்கும் பெயர்பலகை, நவீன பாடத்திட்டம், கண்ணைகவரும் சீருடை போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களில் வளைத்துபோட்டு வரும் தனியார் பள்ளிகளிடமிருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. அதற்காக, தனியார் பள்ளிகளின் தலையில் குட்டு வைத்து, அதன் கடிவாளத்தை அடக்கி வைக்க புதுப்புது முயற்சிகளை கையிலெடுத்து வரும் தமிழக அரசின் பள்ளிகளுக்கு கோடி பாராட்டுக்கள்.