தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு - போலீஸ் கட்டுப்பாட்டில் பசும்பொன்
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம்: பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா பசும்பொன் கிராமத்துக்கு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது, தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் எனப் பொதுமக்களும், கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்ற ஜெயலலிதா, அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார். இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கக் கவசத்தை நன்கொடையாக அளித்தார் ஜெயலலிதா.
ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28 முதல் 30வரை பசும்பொன்னில் நடைபெறும் ஜெயந்தி, குருபூஜையின் போது அணிவிக்கப்படும். பின்னர் ஒரு பெட்டியில் வைத்து மதுரையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா மதுரை வங்கிக் கிளை பெட்டகத்தில் வைக்கப்பட்டுவிடும்.
இந்த தங்கக் கவசத்தை, வெளியே எடுக்கும் அதிகாரம் அதிமுக பொருளாளருக்கும், தேவர் நினைவிட பொறுப்பாளர் ஆகிய இருவருக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் எந்த சர்ச்சையும் ஏற்பட்டதில்லை. இந்த ஆண்டு அணிகள் பிளவுபட்டுள்ளதால் சர்ச்சை எழுந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வமும், டிடிவி தினகரன் தரப்பில் ரங்கசாமி என்பவரும் பொருளாளராக உள்ளனர். இவர்களில் யாரை அதிமுக பொருளாளராக ஏற்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், தங்க கவசத்தை வெளியில் எடுப்பதில் சிக்கல்.
சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் வசம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், கவசத்தை பாதுகாப்புடன் எடுத்துச்சென்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தங்கக் கவசத்தை பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்திற்கு எடுத்துச்சென்றார். அமைச்சர்கள் உதயகுமார், மணிகண்டன் முன்னிலையில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பசும்பொன் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊர் முழுவதும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
நாளை யாகசாலை பூஜையுடன் குருபூஜை தொடங்குகிறது. பல்வேறு சமூகத்தலைவர்கள் அரசியல் கட்சித்தலைவர்கள் பசும்பொன்னிற்கு வந்து தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.