#Brexit தங்கம் விலை அதிரடி உயர்வு... ஒரு சவரனுக்கு 1,104 ரூபாய் அதிகரித்தது
சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,104 ருபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரு.23,720க்கு விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
28 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்ற அச்சத்தால் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து உள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்நிலையில் தங்கம் விலையும் உயர்ந்து உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 138 உயர்ந்து உள்ளது.
ஒரு சவரனுக்கு ரூ 1104 உயர்ந்து 23,720-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்ககத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 182 உயர்ந்து ரூ 3205க்கு விற்பனையாகிறது.
இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் ஷக்திகந்தா தாஸ், ''இன்றைய சூழல் நமக்கு ஒரு எமர்ஜென்சியை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து ரிசர்வ் வங்கியை தொடர்பு கொண்டு நிலைமையை அறிந்து வருகிறோம். நிதியமைச்சரும் நேரடியாக நிலைமையை அறிந்து வருகிறார் என்று கூறியுள்ளார்.
அனைத்து தருணங்களையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது. இன்று ஏற்பட்டுள்ள சரிவு தற்காலிகமானது. ஒரு சில நாட்களில் சந்தை ஸ்திரத்தன்மையை அடையும். மற்ற ஆசிய நாடுகளைப் போன்றே இந்திய நாணயமும் இன்று சரிவை சந்தித்துள்ளது. இந்த சூழலை எதிர்கொள்ள போதிய பொருளாதார சக்தி நமக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
நம்முடையை பெரிய அளவிலான பொருளாதாரமும், அடிப்படை பொருளாதாரமும் வலுவாக உள்ளது. நிதிப் பற்றாக்குறையும் கட்டுப்பாட்டில் உள்ளது. வருமான பற்றாக்குறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசு தொடர்ந்து சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறது'' என்றும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் வெளியேறுவதால் பதற்றமடைந்த முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்துவிட்டு தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன்காரணமாகவே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்த அதே நேரத்தில் தங்கம் விலையில் உயர்வடைந்துள்ளது.
இதனிடையே தங்கம் விலை உயர்வு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தற்போதைக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றும் சென்னை நகை வணிகர் சங்கத்தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார். இந்திதங்கம் நகைகளின் திடீர் விலை உயர்வால் திருமணத்திற்கு நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.