3 ஆண்டுகளுக்குப் பின் ரூ. 24000ஐத் தாண்டியது தங்கம் விலை... தொடர்ந்து உயரும் எனத் தகவல்
சென்னை: தங்கம் விலை ரூ. 24 ஆயிரத்தைத் தாண்டி, கடந்த மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக உச்சத்தை எட்டியுள்ளது.
சமீபகாலமாக பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை மாறி மாறி அதிகரித்தும், குறைந்தும் ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.
அந்தவகையில் கடந்த 25ம் தேதி சவரனுக்கு ரூ.88 குறைந்து சவரன் ரூ.23,328க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்து சவரனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.23,512 ஆனது.
ஏற்றத்தாழ்வு...
இப்படியாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் கடந்த 28ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.23,776க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 சரிந்து ரூ.23,696 ஆனது.
விலை உயர்வு...
ஆனால், நேற்று காலை மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.43 அதிகரித்து ஒரு சவரன் ரூ.24,040 ஆக உயர்ந்தது. மாலையிலும் இதே விலை நீடித்தது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு ஆகும். இதற்கு முன்னர் கடந்த கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஒரு கிராம் ரூ.3,068க்கும், ஒரு சவரன் ரூ.24,544க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெடரல் வங்கி கூட்டம்...
இந்த விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், "கடந்த 2 நாட்களுக்கு முன்பு நியுயார்க்கில் பெடரல் வங்கி கூட்டம் நடந்தது. இதில் ஜப்பான் கரன்சி யென்னுக்கு எதிராக வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வட்டி உயர்த்தப்படவில்லை.
தங்க முதலீடு அதிகரிப்பு...
வட்டி உயர்த்துவது குறித்த முடிவு மேலும் 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீடு செய்பவர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்து உள்ளதால், சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் நீடித்து வருகிறது.
தொடர்ந்து உயரும்...
பெடரல் வங்கி கூட்டம் மீண்டும் செப்டம்பரில் நடக்கிறது. அதுவரை தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்த வண்ணம்தான் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
கவலை...
தங்கத்தின் விலை இப்படியாக வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்காக தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நடுத்தரவர்க்கத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.