இலங்கையிலிருந்து ராமநாதபுரத்திற்கு 20 கிலோ தங்கம் கடத்தப்பட்டதா...
தூத்துக்குடி: இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்ததால் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரம் பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மறைந்து நின்றிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அங்கு வந்த விசைப்படகை மறித்த சோதனை போட்டனர்.
படகு உரிமையாளர் குணசேகரன் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேரை வருவாய் புனலாய்வு துறை அதிகாரிகள் பிடித்து தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர். அங்கு ரோச் காலனியுள்ள மத்திய வருவாய் புனலாய்வு துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர். இந்நிலையில் அந்த படகில் 20 கிலோ வரை தங்கம் சிக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரிகள் எதையும் சொல்ல மறுத்து விட்டனர். செய்தியாளர்கள் பலர் அங்கு தொடர்நது செய்தி சேகரிக்க நின்று கொண்டிருந்தனர்.
இதனால் கோபத்துடன் வெளியே வந்த அதிகாரி ஒருவர் எங்களை பணி செய்ய விடுங்கள், என்று எரிச்சலுடன் கூறிவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் கதவை பூட்டி விட்டு உள்ளே சென்று விட்டார். இதனால் உண்மையில் அந்த படகில் தங்கம் கைப்பற்றப்பட்டதா, படகில் வந்தவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால் அங்கு வந்த படகு குறித்து மர்மம் நீடிக்கிறது.