திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல்.. 3 பேர் அதிரடி கைது
ஒரு கிலோ தங்கம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
திருச்சி: மலேசியாவிலிருந்து ஸ்டெப்ளைசர் எனப்படும் மின் சாதன பொருட்களில் மறைத்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியாவில் தங்கத்துக்கு 15 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் பல வெளிநாடுகளில் இருந்து தங்கம் பல்வேறு வகைகளில் நூதன முறைகளில் கடத்தி வரப்படுகிறது. எனினும் தங்கம் கடத்தி வருபவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருவதுடன், கடத்தல் தங்கத்தினையும் பறிமுதல் செய்து நடவடிக்கைளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் தங்கம் கடத்தி வருவது குறைந்தபாடில்லை. கோவை, திருச்சி, சென்னை, உள்ளிட்ட விமான நிலையங்களில் நாள்தோறும் தங்கம், மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் தொடர்ந்து கடத்தி வரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலையிலும் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் ஆசியா விமானம் தரையிறங்கியது. சுங்கத்துறை அதிகாரிகளும், விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களின் உடமைகளிலும் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான 3 பேரின் உடமைகளை ஸ்கேனர் வைத்து சோதனை செய்ததில், ஸ்டெபிளைசர் எனும் மின்சாதன பொருட்களில் ஒரு கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றினை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள், சென்னையை சேர்ந்த மகரூப், அமீன், அப்துல் சமது ஆகியோர் என தெரியவந்துள்ளது.