சென்னை அருகே ஏரிக்குள் கிடந்த சிலைகள்.. தங்க பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு!
Recommended Video
சென்னை: சென்னை அருகே ஏரிக்குள் இருந்து 'தங்க சிலைகள்' மீட்கப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு நிலவியது.
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள சேந்தமங்கலத்தில் ஏரி உள்ளது. இதனிடையே ஏரி நீருக்குள் தங்கத்திலான சாமி சிலைகள் கிடப்பதாக அக்கம் பக்கத்து ஊர்களில் ஒரு செய்தி தீயாக நேற்று பரவியது.
இதையடுத்து அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள் கூட்டம் கூட்டமாக அந்த ஏரியின் அருகே குவிந்தனர். தகவல் அறிந்து, தாசில்தார் ரமேஷ், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசாரும் அங்கு விரைந்தனர்.
தங்க சிலைகள்
ஏரிக்குள் சாமி சிலைகள் இருப்பதை பார்த்ததும், அதை மீட்க நடவடிக்கை எடுத்தனர். தண்ணீருக்குள் இருந்த 11 சாமி சிலைகளை வெளியே எடுத்து மீட்டனர். அவை தங்க வண்ணத்தில் பளபளப்புடன் இருந்தன. இதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
தங்க நிற பெயிண்ட்
இதையடுத்து அந்த சிலைகளை சோதனை செய்து பார்த்தனர். சிலைகளை சோதனை செய்த போது அவை உண்மையான தங்கத்திலான சிலைகள் இல்லை என்பது தெரியவந்தது. தங்க நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட சிலை என்பது தெரிந்தது. இதில் பெருமளவுக்கு அம்மன் சிலைகளாகும். அதிலும் பெரும்பாலான சிலைகள் உடைந்து சேதம் அடைந்து இருந்தனவாம்.
கொள்ளை கும்பல் கைவரிசை?
தங்க சிலைகள் என்று நினைத்து கொள்ளை கும்பல் ஏதாவது கோயிலில் இருந்து கொள்ளையடித்து வந்து இருக்கலாம் எனவும், அவை சிமெண்ட்டில் செய்யப்பட்ட சிலைகள் என்பது தெரிந்ததும் அதனை ஏரியில் வீசிவிட்டு தப்பியோடி இருக்கலாம் என்பதும் போலீசார் சந்தேகமாகும்.
கோயில் எது என விசாரணை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் எங்கு சிலைகள் மாயமாகி உள்ளது என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.