சித்தர்களும், சித்த மருத்துவமும் நவராத்திரி கொலு கொண்டாட்டம்
சென்னை: நவராத்திரி என்றாலே உற்சாகமும் கொண்டாட்டமும்தான். கோவில்களில் கொலு அலங்காரம் களை கட்டும். பாட்டு, நடனம் என கலைநிகழ்ச்சிகளும் குறைவில்லாமல் அரங்கேறும். ஒருபக்கம் செவிக்கு உணவு கிடைக்கும் போதே வயிறுக்கும் சுவையான சுண்டல்கள், பலவகை உணவுகள் பிரசாதமாக கிடைக்கும். மயிலாப்பூர் சிவ ஆலயங்கள், அம்மன் ஆலயங்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது.
நவம்' என்ற சொல்லுக்கு, 'ஒன்பது' என்றும், 'புதியது' என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி 10 நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனை வணங்கும் முறையும் கடைபிடிக்கப்படுகிறது. முதல்நாள் மகேஸ்வரி, இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரி, மூன்றாம் நாள் வராகி, நான்காம் நாள் மகாலட்சுமி, ஐந்தாம் நாள் மோகினி வடிவம், ஆறாம் நாள் சண்டிகா தேவி, ஏழாம் நாள் சாம்பவி துர்க்கை, எட்டாம் நாள், நரசிம்ம தாரிணி, ஒன்பதாம் நாள் பரமேஸ்வரி என ஒன்பது நாட்களும் ஒன்பது அம்மன் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
கொலு கொண்டாட்டம்
இந்தாண்டும் நவராத்திரி விழாவையொட்டி, கோவில்களிலும், வீடுகளிலும் கொலு வைக்கப்பட்டு, விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி, கோவில்களில், பக்தர்களை கவரும் வகையில், சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
சித்தர்கள் கொலு
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், விருபாட்சீஸ்வரர் உள்ளிட்ட 7 சிவாலயங்களில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொலு பொம்மைகள் ஒருபுறம் இருக்க சித்தர்களும், சித்த மருத்துவமும் கொண்ட வித்தியாசமான கொலு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மாட வீதிகளில் பொம்மைகள்
கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் கொலு பொம்மை விற்பனை களைகட்டியுள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து மயிலாப்பூருக்கு வந்து பொம்மைகளை வாங்கிச் செல்வதால் மாடவீதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
விருபாட்சீஸ்வரர்
மயிலாப்பூர், பஜார் வீதியில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத விருபாட்சீஸ்வரர் திருக்கோயில் மிகப் பழமையான சிவன் கோயிலாகும். இத்திருக்கோயிலில் அலங்கரிக்கப்பட்ட கொலு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
கலைநிகழ்ச்சிகள்
கோவில்களில் கொலு அலங்காரம் ஒரு புறம் இருக்க மறுபக்கம் மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்கு கண்கவர் விருந்தாக அமைந்துள்ளது. நடனம், பாட்டுக்கச்சேரி,பார்த்து ரசித்துக்கொண்டே மறுபக்கம் சூடான சுண்டல்களையும் ரசிக்கத் தவறுவதில்லை.
காரணீஸ்வரர் கோவில்
காரணீஸ்வரர் ஆலயத்தில் கொலு பொம்மைகள், திருமண நிகழ்வுகளின் தீம் வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மாப்பிள்ளையும், பொண்ணும் எத்தனை அழகு என்று பேசிக்கொண்டே கொலு பொம்மைகளை ரசித்து சென்றனர் பெண்கள்.
அம்மனின் அலங்காரம்
கொலு பொம்மைகள் மட்டுமல்ல... உற்சவராய் இருக்கும் அம்மனுக்கு அழகான பட்டுடுத்தி, நகை போட்டு அலங்கரித்திருப்பதைக் காண கண்கோடி வேண்டும்.
அலங்காரமாய் பெண்கள்
இத்தனை நாட்களாய் பீரோவில் உறங்கிய பட்டுப்புடவைகளும், நகைகளும், நவராத்திரியை முன்னிட் டு வெளியே எட்டிப்பார்க்கின்றன. கொலு பார்க்கிறோமோ இல்லையோ பெண்கள் அணிந்து வரும் பட்டுப்புடவைகளையும், அழகான விதவிமான நகைகளையும் ரசிக்கத் தவறுவதில்லை.
உறவும், நட்பும்
நீண்டநாள் பேசாமல் இருக்கும் நண்பர்கள் கூட வீட்டில் கொலு வைத்திருந்தால் அழைக்காமல் இருக்கத் தவறுவதில்லை. கையில் ஒரு அழகான பொம்மையுடன் நண்பர்கள் வீட்டு கொலுவை பார்க்கப் போவது தனி மகிழ்ச்சிதான் போங்கள். நவராத்திரி அம்மனுக்கு உகந்த பண்டிகை மட்டுமல்ல. நட்பையும், உறவையும் உற்சாகப்படுத்தும் பண்டிகை என்பது அனைவரும் உணர்ந்து கொள்ளலாம்.