நிறைய ஏமாற்றம்.. நிறைய வலிகள்.. நிறைய அதிர்ச்சிகள்.. விடை பெற்றது 2019.. அன்புடன் வரவேற்போம் 2020ஐ!
புது வருடத்தை அன்புடன் வரவேற்க மக்கள் தயாராகி விட்டனர்
சென்னை: ஒருவழியாக 2019 ஒழிந்து போய்விட்டது.. ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்தின்போதும் நண்பர்களை போல அதை பூச்செண்டு கொடுத்து பூரித்து வரவேற்றும்.. கொஞ்சமும் நன்றியே இல்லாமல் - கொஞ்சமும்கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சில ஆண்டுகள் நடந்து கொள்கின்றன.. ஒவ்வொரு ஆண்டுமே சுனாமியால் தண்டித்த 2004 போலவே இருக்கிறது!
வழக்கம்போல 2019-ஐயும் நாம் மகிழ்ச்சியுடன்தான் வரவேற்றோம்.. குதூகலத்தோடுதான் கொண்டாடினோம்.. நம்பிக்கையுடன்தான் காத்திருந்தோம்.. ஆனால் முழுமையாக அது நம்மை ஏமாற்றிவிட்டது. மோசமான ஆண்டுகளில் ஒன்றாக மாறிவிட்டது.
பல மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை, பயங்கரவாத தாக்குதல், நக்சலைட்டுகளின் வன்முறை நடவடிக்கைகள் குறையவே இல்லை.. முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் கலக்கத்தையும், பீதியையும் தந்துவிட்டன.
கொடுமைகள்
மலிந்து போன அரசியல், நலிந்து போன சமாச்சாரங்கள் நம்மை நிலைகுலைய வைத்துவிட்டன.. அவ்வளவு ஏன், மனித உரிமை போராளிகள்கூட தண்டிக்கப்படும் கொடுமைகளும் அரங்கேறின !சில அரசியல் தலைவர்களின் கைதுகள், பழிவாங்கும் நடவடிக்கைகளும் இதில் அடக்கம்.
இயற்கை
பொதுமக்கள் வாழ்க்கையோ நரகமாகிவிட்டது.. பெட்ரோல் டீசல் விலை முதல் வெங்காயம் விலை விண்ணை முட்டும் வரைக்கும் எடுத்து சென்று அடிவயிற்றில் புளியை கரைத்து விட்டன.. போதாக்குறைக்கு வேளைகெட்ட வேளையில் மழை பெய்ய, பருவம் தவறி புயல் அடிப்பதும், பெரும் துயரங்களுக்கு வித்திட்டுவிட்டது.. காலம்கூட கோளாறு செய்ய துவங்கிவிட்டது.
பலாத்காரம்
மனிதநேயமும், பாசமும், மண்ணுக்குள் புதைய ஆரம்பித்துவிட்டன.. கொலைகள், கொள்ளைகள், வழிப்பறிகள், கற்பழிப்புகள், குழந்தை பாலியல் வன்கொடுமைகள், கூட்டு பலாத்காரங்கள், எல்லை மீறிவிட்டன. பெற்ற சிசுக்களை அவற்றின் தாய்மார்களே கழுத்தை நெரித்து கொன்று குப்பை தொட்டிகளிலும், கழிவறைகளிலும் வீசிவிடுகிறார்கள்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன்களை கொல்லும் கொடூரங்கள், அவனை பழிவாங்குவதாக நினைத்து ஒரு பாவமும் அறியாத பிஞ்சுகளை கொன்று போடும் அநியாயங்களும் 2019-ஐ அள்ளி சென்றுள்ளது!
ஒற்றுமை
ஆனால், மொழிக்கு ஒரு இழுக்கு என்றால் ஒட்டுமொத்த மக்களின் ஒன்றுபட்ட போராட்டமும், சமூக பிரச்சனைகளுக்காக இளைஞர்களின் உணர்ச்சி மிகு எழுச்சியும் மட்டுமே நமக்கு ஆறுதலாக இருந்து வருகின்றன! இதைதான் டெல்லி போராட்டம் நமக்கு நேரடியாக சுட்டிக்காட்டி மெய்ப்பித்துள்ளது!
அரசியல்வாதிகள்
ஆனால், இனி வரும் காலம்.. அரசும், நிர்வாகமும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் மக்களை பற்றின கவனிப்பில் இனியாகிலும் கூடுதலாக அக்கறை செலுத்த முயல வேண்டும்.. விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் ஊக்குவித்து வளர்த்து.. புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டால் மனிதகுலம் எண்ணற்ற பயன்களை பெறும் என்பதை உணர வேண்டும்.
அன்பு - பாசம்
மக்கள் தங்கள் விளம்பர மோகத்தை - சினிமா மோகத்தை கைவிட்டு - மனித நேயத்தை மேலும் வளர்த்து கொள்ள வேண்டும். போலிகளை கண்டு ஏமாறாமல், நிஜங்களை தேடும் பயணத்தை துவக்க வேண்டும்.. வாழ்க்கையின் அர்த்தத்தையும், உண்மையின் உன்னதத்தையும் புரிந்து கொள்ள விழைய வேண்டும். மனிதம் தழைக்க.. தாய்மை சிறக்க.. உறவுகள் வலுப்பட.. பிணைக்கும் பாசத்தாலும், உருக்கும் அன்பாலும் இனிவரும் நாட்களை நகர்த்தி செல்ல அனைவரும் முயல்வோம்.. நம்பிக்கையுடன் வரவேற்போம் 2020ஐ!