ஆளுநரிடம் இருந்து விரைவில் அழைப்பு வரும்- வைகை செல்வன்
சசிகலாவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதாகவும், அவர் ஆட்சியமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: ஆளுநர் எங்களை ஆட்சியமைக்க அழைப்பார் விரைவில் நல்ல செய்தி வரும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார். ஓ.பன்னீர் செல்வத்துடன் சென்றவர்கள் விரைவில் கட்சிக்குத் திரும்புவார்கள் என்றும் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
போயஸ்தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகைச் செல்வன், சசிகலாவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. சட்ட வல்லுநர்களும் அவர் பதவியேற்கத் தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.
ஆனால் ஆளுநரின் தாமதம், யூகங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. ஆளுநரின் தாமதத்துக்குப் பின்னால், பாஜகவும் திமுகவும் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றும் வைகைச் செல்வன் குற்றம் சாட்டினார்.
சசிகலாவுக்கு பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அவரே முதல்வர் ஆவார். 7 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவை மட்டுமே பெற்றுள்ள பன்னீர்செல்வத்தால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அவரை ஆதரித்தவர்கள் அனைவரும் விரைவில் கட்சிக்குத் திரும்புவார்கள். என்றும் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.