கருணை நாயகன் சிலுவையில் அறையப்பட்ட நாள் ... இன்று புனித வெள்ளி!
சென்னை: கருணை நாயகன், உலக ரட்சகன் இயேசு கிறிஸ்து மக்களுக்காக தன்னை சிலுவையில் ஒப்புவித்துக் கொண்ட நாள் இன்று. உலகமெங்கும் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட இந்த நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.
கல்வாரி மலையில் உலக மக்களுக்காக சுவாசித்த, போதித்த அந்த அன்பு உயிர் சிலுவையில் சிறைப்பட்டு போன நாள் இன்று.
கருப்பு வெள்ளியாக, புனித வெள்ளியாக இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் அனுசரிக்கப்படுகிறது.
இன்றிலிருந்து மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று இயேசுநாதர் உயிர்த்தெழுந்தார். அந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இயேசுநாதர் கி.பி. 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட ஆண்டு கி.பி. 34 என்று சர் ஐசக் நியூட்டன் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பின்னர் நடந்த புதிய ஆய்வின்படி கி.பி. 33ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஒரு துரோகத்தின் விளைவாக கருணையே நிரம்பிய இயேசுநாதர் மரணத்திற்குப் பரிசாக அனுப்பப்பட்ட தினம்தான் இன்றைய நாள். இந்த நாளை நோண்பிருந்து அனுசரிக்கின்றனர் கிறிஸ்தவர்கள்.
மேலும் சர்ச்சுகளில் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சி நடித்துக் காட்டப்படும்.
தமிழகம் முழுவதும் இன்று புனித வெள்ளி சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சிகள், சிலுவையில் இயேசு அறைய்படும் காட்சிகளுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.