தமிழகத்தில் தற்போதைய நல்லாட்சி தொடர வேண்டும்... சொல்வது தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம்
தமிழகத்தில் தற்போதைய நல்லாட்சி தொடர வேண்டும் என்று தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
பெருந்துறை: தமிழகத்தில் தற்போதைய நல்லாட்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தினகரன் அணியின் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏக்களை திரட்டி கலகக் குரல் கொடுத்தார். அமைச்சர் பதவிக்காகவே தோப்பு வெங்கடாசலம் குரல் கொடுப்பதாக கூறப்பட்டது.
அமைப்பு செயலர் பதவி
எடப்பாடி கோஷ்டியை வெறுப்பேற்றும் வகையில் தினகரனை தொடர்ந்து சந்தித்து வந்தார் தோப்பு வெங்கடாசலம். அவரை அதிமுகவின் அமைப்பு செயலர்களில் ஒருவராக தினகரன் நியமித்திருக்கிறார்.
புதிய நிர்வாகிகள் நியமனம்
இந்நிலையில் பெருந்துறையில் செய்தியாளர்களிடம் தோப்பு வெங்கடாசலம் கூறியதாவது: தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான தற்போதைய நல்லாட்சி தொடர வேண்டும். அதிமுகவை வலுத்தப்படுத்தவே புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்திருக்கிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் இருந்தபோது எனக்கு ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியை தருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
கூட்டு குடிநீர் திட்டம்
அதிமுகவுக்கு 8 தொகுதிகளையும் பெற்றுக் கொடுத்த ஈரோடு மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பெருந்துறைக்கான கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தையும் விரைவாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் கூறினார்.