கோவையில் கொட்டி வரும் கோடை மழை.. வரும் நாட்களிலும் தொடரும் என அறிவிப்பு
கோவையில் வரும் காலங்களில் கோடை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கோவை: கோவையில் சராசரி அளவை தாண்டி கோடை மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கணித்து உள்ளனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து உள்ளது. நேற்று முன் தினம் இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது.
இந்நிலையில் கோவையில் மார்ச், ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் கோடை மழை சராசரியாக 133 மில்லி மீட்டர் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி இதுவரை 150 மில்லி மீட்டர் பெய்து உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த அளவு சராசரி கோடை மழையை விட அதிகமாகவே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் வருகிற நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் எனவும் கணித்து உள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவையில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.