கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது.. எச் ராஜா என்ன சொல்கிறார் தெரியுமா?
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது செய்யப்பட்டது தொடர்பாக எச் ராஜா டிவிட்டியுள்ளார்.
சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது செய்யப்பட்டது தொடர்பாக 'நல்லது நடக்கும்' என எச் ராஜா டிவிட்டியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டுக்கான ஒப்புதல் பெறப்பட்டதில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் செல்வாக்கை அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் பயன்படுத்தியாக புகார் கூறப்பட்டது.
இதுபற்றி அமலாக்கத்துறை சட்டவிரோத பணிபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு நேற்று முன்தினம் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் அவருடைய ஆடிட்டரான பாஸ்கர ராமனை நேற்று காலை டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், "விசாரணைக்கு பாஸ்கரராமன் ஒத்துழைக்கவில்லை என்றனர். பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவரை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர்.
எனினும் தனிக்கோர்ட்டு நீதி பதி சுனில் ரானா, அவரை 5 நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு அனுமதி அளித்தார். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் கைது. 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை. நல்லது நடக்கும்
— H Raja (@HRajaBJP) February 16, 2018
அதாவது, கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் கைது. 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை என்று பதிவிட்டுள்ள அவர் நல்லது நடக்கும் என தெரிவித்துள்ளார்.