மறைத்து மறைத்து குட்கா விற்பவர்களே உஷார்.. இனி உங்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: கமிஷனர் எச்சரிக்கை
கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பவர்கள் மீத குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சென்னை: கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்க போலீசாரே லஞ்சம் வாங்கியுள்ள கொடுமை நடந்துள்ளது. அதற்கான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே இன்னமும், போதைப் பொருட்கள் தமிழகத்தில் தண்ணீர் போல் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றும் கூட கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள கடை ஒன்றில் இருந்து, ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னை ஆணையர் விஸ்வநாதன் போதைப் பொருளை விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரித்துள்ளார். மேலும், போதைப் பொருட்களை தயாரித்தாலும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.