லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்… இனி கறிக்கோழி, காய்கறி கேரளாவுக்கு போலாம் ரைட்!
கோவை: வாளையார் சோதனை சாவடி பிரச்னை குறித்து, லாரி உரிமையாளர்கள் மற்றும் கேரள அரசு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், ஆறு நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலைநிறுத்தம் நேற்றிரவு திரும்ப பெறப்பட்டது. இதனையடுத்து இதுநாள்வரை தேக்கமடைந்திருந்த கறிக்கோழிகள், காய்கறிகள் வழக்கம் போல கேரளாவிற்கு செல்லத்தொடங்கியுள்ளது.
கேரள-தமிழக எல்லையில் கோவை அருகே அமைந்துள்ளது வாளையார் சோதனைச் சாவடி வழியாக செல்லும் சரக்கு லாரிகளின் ஆவணங்களை சரிபார்க்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை கண்டித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில், வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதையடுத்து கேரள அரசு, வாளையார் சோதனை சாவடியில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த உறுதியளித்தது. ஆனால், கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கின. கடந்த 3 ம் தேதி முதல் கேரளாவில் உள்ள 18 சோதனை சாவடிகளிலும் லாரிகள் நிறுத்தப்பட்டன. ஆறு நாட்களாக தொடர்ந்து நடந்து வந்த வேலைநிறுத்தம் காரணமாக காய்கறிகள், கறிக்கோழிகன் என 500 கோடி ரூபாய் அளவிலான சரக்குகள் தேக்கமடைந்தன.
இந்நிலையில், கேரள அரசு நேற்று திருவனந்தபுரத்தில் பேச்சு நடந்த லாரி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. கேரளா மாநில முதல்வர் உம்மன்சான்டி, நிதியமைச்சர், திருவனந்தபுரம் கலெக்டர், தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா, கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டது. எங்கள் தரப்பில் வைக்கப்பட்ட கூடுதல் பூத், ஸ்கேனிங் இயந்திரம், சரக்கு கிடங்கு, டிரைவர்களுக்கு ஓய்வெடுக்கும் அறைகள், கீரின் சேனல் முறை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என,கேரள அரசு தெரிவித்துள்ளது.
கோரிக்கைகள் அனைத்தையும் ஆறு வார காலத்துக்குள் நிறைவேற்றப்படும் எனவும் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற கேரள அரசு சார்பில் நான்கு பேர், எங்கள் தரப்பில் நான்கு பேர் என, எட்டு பேர் கொண்ட குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என, உறுதியளித்துள்ளதால் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் தெரிவித்தார்.