அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதால் ரயில் பயண நேரங்கள் மாற்றம் !
அரக்கோணம் அருகே சரக்குரயில் தடம்புரண்டதால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரக்கோணம் : அரக்கோணம் அருகே இன்று காலை சரக்கு ரயில் தடம்புரண்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்புப்பாதைகளில் மீட்புப் பணிகள் நடந்துவருவதால், ரயில் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரக்கோணம் அருகே மேல்பாக்கத்தில் இன்று காலை சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
சென்னைக்கு வரும் முக்கிய வழியான இப்பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதமாக வரும் என்றும், சென்னையில் இருந்து கேரளா, பெங்களூரு செல்லும் ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை - கே.எஸ்.ஆர் பெங்களூரு விரைவு ரயில் 1.35 மணிக்கு பதில் 3.40 மணிக்கு புறப்படும் என்றும், கோவை இண்டர்சிட்டி விரைவு ரயில் பிற்பகல் 2.30 மணிக்கு பதில் 3.55 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை ஹூப்ளி விரைவு ரயில் பிற்பகல் 3 மணிக்கு பதில் 4.45 மணிக்கு புறப்படும் என்றும், சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் விரைவு ரயில் 3.15 பதில் 4.45 மணிக்கு புறப்படும் என்றும், சென்னை - ஆலப்புழா விரைவு ரயில் இரவு 8.55 மணிக்கு பதிலாக 10.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
தற்போது மீட்புப் பணிகள் ஓரளவு முடிந்திருப்பதால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துளனர்.