சர்.சி.வி. ராமனின் 125வது பிறந்த நாள்: கூகுள் இணையதளம் கௌரவம்
சென்னை: நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞரான சர்.சி.வி.ராமனின் 125 வது பிறந்த தினத்தை கூகுள் கொண்டாடியுள்ளது.
சர்.சி.வி. ராமனுக்கு கௌரவம் தரும் விதமாக, கூகுள் இணைதளம் தனது தேடுதல் பக்கத்தில், கூகுள் டூடுளில் சர்.சி.வி.ராமன் படத்தையும் அவரது கண்டுபிடிப்பையும் போட்டுள்ளது.
திருச்சி மைந்தர்
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் திருவானைக்காவலில் ஆர்.சந்திரசேகர ஐயர், பார்வதி அம்மாள் தம்பதிக்கு 1888ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்தவர் ராமன்.
தமிழராய் பிறந்து இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. பல சாதனைகள் படைத்த சர்.சி.வி.ராமன் 1970 நவ.21ல் தனது 82வது வயதில் காலமானார்.
இயற்பியல் பட்டம்
1904ல் இயற்பியலில் பட்டம் பெற்ற அவர், அந்த ஆண்டு தங்கப் பதக்கமும் வென்றார். அப்போதைய மிகப் பெரும் பட்டமான மாஸ்டர் பட்டத்தை இயற்பியலில் 1907ல் பெற்றார் ராமன்.
நோபல் பரிசு
1930ல் ஒளிச் சிதறலை மையமாக வைத்து இவர் கூறிய ஆய்வு முடிவு, நோபல் பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. 1944ல் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்ஸில் இருந்து பணி ஓய்வு பெற்றார்.
நீல நிறம்
ஒளிவிலகல் கோட்பாட்டில், ஒரு ஒளிபுகும் ஊடகம் மூலம் ஒளி பாயும்போது, சில ஒளிக்கற்றைகள் தம் அலைநீளத்தில் மாறுதல் அடைகின்றன என்று கண்டுபிடித்தார்.
இதன் அடிப்படியிலேயே ராமன் விளைவு எனப்படும் தத்துவம் உருவானது. கடல், வானம் உள்ளிட்டவை நீல நிறமாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று அவர் கூறியதும் இதன் அடிப்படையில்தான்.
ராமன் விளைவு
ராமன் விளைவை வெளிப்படுத்தும் விதமாக இன்று கூகுள் இணையதளம் தனத் தேடு பக்கத்தில் உள்ள படத்தை ராமன்விளைவுப் படமாகப் போட்டு கௌரவப்படுத்தியுள்ளது.