செவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யானின் “முதல் மாசம்” – டூடுளில் கொண்டாடும் கூகுள்!
சென்னை: இந்தியாவின் மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குப் போய் ஒரு மாதம் ஆவதையொட்டி, கூகுள் தனது டூடுள் மூலம் அதைக் கொண்டாடியுள்ளது.
எந்த ஒரு அனிமேஷனும் இல்லாத இந்த டூடுள், மங்கள்யான் முன்புறத்திலும், அதன்பின்னால் செவ்வாய் கிரகமும் தெரிவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு வரையப்பட்ட படம் போல் தோன்றும் இந்த டூடுளானது, 80 மற்றும் 90களில் பாடப்புத்தகத்தில் காணப்படும் வான்வெளி சார்ந்த படங்களைப் போலவே தோற்றமளிக்கின்றது.
சுற்றுப்பாதையில் மங்கள்யான்:
கடந்த வருடம், நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று தனது பயணத்தை தொடங்கிய மங்கள்யான், இந்த வருடம் செப்டம்பர் 24 அன்று செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
மைல்கல் சாதனை:
இந்திய விண்வெளித்துறையில் பெரும் மைல்கல்லாக இஸ்ரோவால் நிகழ்த்தப்பட்டது இச்சாதனை.
புதிய வரலாறு துவக்கம்:
இந்த செவ்வாய் நோக்கிய மங்கள்யான் பயணத்தை இந்திய பிரதமரான நரேந்திர மோடி, மிகப்பெரிய சாதனையாக கூறியிருந்தார். "புதிய வரலாறு இன்று உருவாகி உள்ளது.
வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்:
முடியவே முடியாது என்ற ஒன்றை இன்று நாம் நிகழ்த்திக் காட்டியுள்ளோம். இஸ்ரோவின் விஞ்ஞானிகளுக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் இந்த வரலாறு காணாத சாதனைக்காக மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று சுற்றுப் பாதையில் மங்கள்யான் நுழைந்தபோது தெரிவித்திருந்தார்.
ஷேர் ஆகிய போட்டோக்கள்:
செவ்வாயின் அருகில் சென்ற பின்னர், மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அப்புகைப்படங்களில் செவ்வாயின் முழுத்தோற்றத்தையும் காட்சிப்படுத்தும் போட்டோ ஒன்றை உலகம் முழுவதும் ஷேர் செய்து கொண்டது.
ஒரு லட்சம் பாலோயர்கள்:
மேலும், மங்கள்யானின் சாதனைகளை கூறுவதற்காகவே, @மார்ஸ்ஆர்பிட்டர் என்ற டுவிட்டர் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டுவிட்டர் பக்கத்திற்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் வலைத்தள பின்பற்றுபவர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.