தலித் இளைஞர் சங்கர் ஆணவகொலை வழக்கு: கவுசல்யா தாய், தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆதிக்க ஜாதியினரால் தலித் இளைஞர் சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தந்தை, தாய், மாமன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞரான சங்கர், நடுரோட்டில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
ஜாதி மறுப்பு திருமணம் செய்த காரணத்திற்காக, பெண்ணின் குடும்பத்தார், கூலிப்படையை ஏவி அவரை வெட்டி படுகொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வெளியான காட்சிகள்
இந்த தாக்குதலின்போது சங்கரின், மனைவி கௌசல்யா பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாய், தந்தை கைது
இதுகுறித்து, உடுமலைபேட்டை போலீஸார், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் மதன், மதனின் கூட்டாளிகளான பழனி, மணிகண்டன், திண்டுக்கலை சேர்ந்த ஜெகதீசன், அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார், பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 9 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்..
குண்டர் சட்டம்
இந்நிலையில், தற்போது, கவுசல்யாவின் தந்தை, தாய், மாமன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பலர் மீதும்
இந்த வழக்கில் இன்னும் சில குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.