தமிழக அரசின் அலட்சியம்தான் பெரியார் சிலையை உடைக்கும் தைரியத்தைக் கொடுத்தது: ராமதாஸ்
தமிழக அரசின் அலட்சியமே பெரியார் சிலையை உடைக்கும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழக அரசின் அலட்சியப்போக்குதான், பெரியார் சிலையை உடைக்கும் தைரியத்தை சமூக விரோதிகளுக்கு கொடுத்திருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைக்கப்பட்டிருந்த பெரியார் உருவச்சிலையின் தலை நேற்று முன் தினம் இரவு உடைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசின் அலட்சியப்போக்கால் தான் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காட்டுமிராண்டித்தனமான செயல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் உருவச் சிலையின் தலையை சில சமூக விரோதிகள் துண்டித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரு வாரத்தில் நிகழ்ந்த இரண்டாவது நிகழ்வு இதுவாகும். காட்டு மிராண்டித்தனமான இந்தச் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
நள்ளிரவில் உடைக்கப்பட்ட சிலை
தமிழகத்தில் கடந்த காலங்களில் சிலைகள் அவமதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், தந்தை பெரியாரின் சிலையிலிருந்து தலையை துண்டித்த நிகழ்வு நடந்ததில்லை. தந்தை பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று கொக்கரித்தவர்கள் தாங்கள் நினைத்ததை நடத்திக் காட்ட முடியும் என்பதை நிரூபிப்பதற்காக நள்ளிரவில் வந்து இந்த செயலைச் செய்து விட்டு போயிருக்கிறார்கள்.
பெரியாருக்கு எதிராக கொக்கரிப்பு
அவர்களுக்கு இத்தகைய துணிச்சல் எங்கிருந்து வந்தது? தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று கொக்கரித்தவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இம்மாதத் தொடக்கத்தில் தந்தை பெரியாருக்கு எதிராக கொக்கரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் தான், புதுக்கோட்டை மாவட்டத்திலும் தந்தைப் பெரியாரின் சிலையை சேதப்படுத்தும் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.
உடனடியாக நடவடிக்கை தேவை
இத்தகைய நிகழ்வுகள் இனியும் நடப்பதைத் தடுக்க புதுக்கோட்டை ஆலங்குடியில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களையும், அதற்கு தூண்டியவர்களையும் அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைவர்களின் சிலையை உடைப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.