ஒரே நாளில் 5 பேருக்கு குண்டாஸ்: திருச்சி கலெக்டர் அதிரடி
திருச்சி: திருச்சியில் ஒரே நாளில் ஐந்து கொள்ளையர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி இவரது வீட்டில் மனைவி தமிழ் மட்டும் தனியாக இருந்தபோது மர்மநபர்கள் அரிவாளைக்காட்டி மிரட்டி நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்ததோடு வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரையும் எடுத்துச் சென்றனர்.
இதைப்போலவே சிறுகனூருக்கு அருகே பேராசிரியரான கண்ணன் வீட்டிலும் கார் மற்றும் நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க மத்திய மண்டல ஐ.ஜி. ராமசுப்ரமணியன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் விசாரணையை துவக்கிய போலீஸ், வடிவேல் வீட்டில் திருடி சென்ற செல்போன் எண் டவர் மூலம், தேடுதல் வேட்டை நடத்தியதில் நாமக்கல் பகுதியில் அனாதையாக நின்ற காரை கைப்பற்றினர். மேலும் நெல்லை மாவட்டம் கட்டுடையார்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயராஜை கைது செய்தனர். பிறகு அவர் அளித்த தகவல்படி நெல்லையை சேர்ந்த சுரேஷ், ஸ்ரீவைகுண்டம் லட்சுமணராஜா, கட்டுடையார்குடியிருப்பை சேர்ந்த துரைபாண்டியன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து கார், சுமார் 20 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் மீட்ட காவல்துறையினர், திருச்சி, நெல்லை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு உள்பட பல இடங்களில் மொத்தம் 13 வழக்குகள் இருப்பதை உறுதி செய்து கைதான 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோலவே துவாக்குடி தெற்கு மலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தநிலையில், மணிகண்டனை சில நாட்களுக்கு முன் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் போலிசார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரும் 25 வயதுக்குட்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.