தன்னெழுச்சி போராட்டத்தை சுயநலத்துக்காக வளைக்க நடந்த சதியை முறியடித்த இளைஞர் படை!
மாணவர், இளைஞர் தன்னெழுச்சி போராட்டத்தை ஒரு கும்பல் தங்களது சுயநலத்துக்காக வளைக்கவும் சதி செய்திருக்கிறது. ஆனால் அதை மாணவர்கள், இளைஞர்கள் முறியடித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு புரட்சியை தங்களது அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நடந்த சதியை இளைஞர் படை முறியடித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 'செயல்படுகிற' அரசாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு இருந்து வருகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது மக்களும் அதிமுக தொண்டர்களும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
இதனால்தான் முதல்வர் பதவியை கபளீகரம் செய்ய துடிக்கும் கும்பலால் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முடிந்த அளவு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது அதிருப்தியை உருவாக்க எல்லா வழிகளையும் கையிலெடுத்து வருகிறது அக்கும்பல்.
போலீஸ் மூலம்...
சென்னையில் தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செல்லும்போது போலீசார் வேண்டுமென்றே வாகனங்களை நிறுத்தி வைப்பது; சென்னையில் வரலாறு காணாத வன்முறையை போலீஸ் மூலம் கட்டவிழ்த்துவிட்டது என்பதெல்லாமே அந்த கும்பலின் சதிதான் எனக் கூறப்படுகிறது.
நம்பிக்கை வைக்காத மாணவர்கள்
தற்போது இக்கும்பலைச் சேர்ந்த தலையெடுக்க துடிக்கும் அடுத்த தலைமுறையினர், மாணவர்கள் போராட்டத்தை வளைக்க எவ்வளவோ முயற்சி செய்தோம்.. பணத்தைக் காட்டியும் பார்த்தோம். ஆனால் இந்த பெருங்கூட்டம் நம்ம மீது நம்பிக்கை வைக்கவில்லையே என உச்சுகொட்டி புலம்பி வருகிறதாம்.
ஓபிஎஸ்க்கு எதிராக திருப்ப...
மாணவர்கள் புரட்சியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான போராட்டமாக மடை மாற்றிவிட இந்த கும்பல் துடியாய் துடித்து காத்திருந்தது. ஆனால் இந்த கும்பலின் ஊடுருவலை மாணவர்கள், இளைஞர்கள் பெரும்படை நன்றாகவே புரிந்து கொண்டு ஒருவரையும் உள்ளேவிடாமல் அவர்களது சதியை முறியடித்து வெற்றி கண்டுவிட்டனர்.
போலீஸ் தாக்குதலுக்கு காரணம்
இந்த வெற்றியால் கடும் ஆத்திரம் கொண்ட அந்த கும்பல்தான் போலீஸை ஏவி விட்டு மாணவர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.