எங்கே என் தனயன்.. தனித்து காத்து கிடக்கிறது கோபாலபுரத்து வீடு!
களையின்றி காணப்படும் கோபாலபுரம் வீடு
Recommended Video
சென்னை: கோபாலபுரம் 4-வது தெரு. அந்த குறிப்பிட்ட வீடு.
கருணாநிதி அமைச்சராவதற்கு முன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடு தான் இது!! இரவு பகல் ஓயாமல் உழைத்து, திரைக்கதை, வசனம் எழுதி ஊதியம் பெற்று, அரசியலில் சம்பாதித்து வாங்கிய ஒரே வீடு இது மட்டும்தான்!! இதை தவிர வேறு வீடு கருணாநிதிக்கு இருந்ததில்லை!!
நேற்று வரை எத்தனையோ சரித்திர நிகழ்வுகளை பறை சாற்றிய இடம்!! எத்தனையோ அரசியல் சம்பவங்களுக்கு அடித்தளமிட்ட இடம்!! 50 ஆண்டு கால அரசியல், கலை, சினிமா, இலக்கியம், உள்ளிட்ட துறைகளின் ஜாம்பவான்களை வரவேற்று தாங்கி பிடித்த இடம்!!
இந்த கோபாலபுரம் வீடு - இன்று தாயை இழந்த குழந்தையாய் தனித்து விடப்பட்டுள்ளது. பந்தல், தோரணங்கள், அலங்காரங்கள், விளக்குகள் என அலங்கரித்து பார்த்த தன் தந்தையை காணாமல் கண்கள் அலைபாய்ந்து தேடி கொண்டிருக்கிறது. எங்கு சுற்றினாலும், எங்கு பயணித்தாலும் கடைசியில் தன் மடிமேல் வந்தே விழும் தன் சகோதரனை காணாமல் வெறித்து பார்த்துக் காத்திருக்கிறது.
" சூரியன் அஸ்தமனத்தால் ஒளியிழந்திருக்கும் கோபாலபுரம் "#KarunanidhiDemise | #RIPKarunanidhi | #MKLiveUpdates | #News7Tamil | #Karunanidhi | #RIPKalaignar | #கலைஞர் | #Kalaingar#KalaignarKarunanidhi@mkstalin @news7tamil pic.twitter.com/nHp3NkupAS
— Chozhar parambarayil oru MLA (@askmewhoi) August 8, 2018
கருணாநிதியின் ஒவ்வொரு அசைவையும் குடும்ப உறுப்பினர்களை விட தான்தானே நன்கு அறிவேன் என்று தன் தோழனை காணாமல் களையிழந்து வருகிறது. தாயாய், தந்தையாய், தோழனாய்... உறவு கொடுத்த உயிர் எப்போது வரும் என கோபாலபுரம் வீட்டின் செங்கற்களும், தூண்களும் தவித்து கொண்டிருக்கின்றன.
வசதி குறைவான வீடாக இருந்தாலும், எளிமையான வீட்டிலேயே கடைசி வரை வாழ்ந்த தன் தனயன் எங்கே என்று வீட்டு கதவுகளும், ஜன்னல்களும் கேட்கின்றன. நோயின்பாதை நீண்டு, அதற்கான போராட்டங்களும் நீண்டு கடைசியில் நீ வருவாய் என வெறிச்சோடி கிடக்கிறது கோபாலபுர வீதிகள்...!