அரசியல்வாதி போல பேசி நடிக்கிறார் ராமமோகன ராவ்.. கோபண்ணா கருத்து
ராம மோகன் ராவ் கபட நாடகமாடுகிறார், அவர் அரசியல்வாதி போல பேசி முதல்வரை அச்சுறுத்துகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணா கூறியுள்ளார்.
சென்னை: ராம மோகன் ராவ் வீட்டில் கடந்த 21ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் 25 மணிநேரம் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்த பின்னரும் அவர், நெஞ்சுவலி என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன் ராவ், வருமான வரித்துறை அதிகாரிகளை கடுமையாக குற்றம் சாட்டினார். துப்பாக்கி முனையில் தனது வீட்டில் சோதனை நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தான் மக்கள் மன்றத்திற்கு செல்வேன் என்றும் ராம மோகன் ராவ் குற்றம் சாட்டினார்.
ராம மோகன் ராவின் பேட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணா, முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தை அவர் அச்சுறுத்துகிறார் என்றும் தெரிவித்தார். அவர் ஐஏஎஸ் அதிகாரி போல பேசவில்லை, அடாவடித்தனம் செய்கிறார் என்று கூறிய கோபண்ணா. மக்கள் மன்றத்தில் இவர் எப்படி நியாயம் கேட்க முடியும். ராம மோகன் ராவ் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார் கோபண்ணா. ராம மோகன் ராவ் கொடுத்துள்ள பேட்டி பெரும் புயலை கிளப்பியுள்ளது.