தகிக்கும் தமிழகம்... சர்ச்சையான உளவுத்துறை உயர் அதிகாரியின் 'லாங் ஃபாரின் டூர்'
உளவுத்துறை உயர் அதிகாரியின் வெளிநாட்டு பயணம் சர்ச்சையாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், தமிழக உளவுத்துறை உயரதிகாரி கோடை விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். சுமார் 22 நாட்கள் கழித்துதான் தமிழகம் திரும்புகிறார்.
தமிழகத்தில் காவிரி போராட்ட.க்கள், பாஜகவின் எச்.ராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்டவர்களால் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனை, நிர்மலாதேவியால் ஏற்பட்டிருக்கும் குற்றவியல் சம்பவங்கள், அதிகரித்துவரும் வழிப்பறி கொள்ளைகள், நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக மத்திய அரசின் எச்சரிக்கை உள்ளிட்ட சென்சிட்டிவ்வான பல பிரச்சனைகளை எடப்பாடி அரசு எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், உளவுத்துறை தலைமை அதிகாரி வெளிநாடு சென்றுள்ளது ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே சலசலப்பை எதிரொலிக்க வைத்துள்ளது. நாட்டில் நடக்கப் போகும் பல பிரச்சனைகளை முன் கூட்டித் துப்பறிந்து அரசுக்கு தெரிவிக்கும் உளவுத் துறையின் முக்கிய உயரதிகாரி, வெளிநாடு சென்றிருப்பது சரி அல்ல என உளவுத்துறையில் கடுமையான முணுமுணுப்பை எதிரொலிக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து சில ஐ.பி.எஸ். உயரதிகாரிகள் மாநில உள்துறை செயலர் நிரஞ்சன்மார்ட்டியிடம் கேள்வி எழுப்பியிருப்பதாக கோட்டையில் எதிரொலிக்கிறது. அதேநேரத்தில் அரசு தரப்புக்காக சில காரியங்களை சாதிக்கத்தான் இந்த பயணம் என்கிற கிசுகிசுவையும் கோட்டையில் கேட்க முடிகிறது.