தொடரும் வதந்திகள்... கடுப்பில் கவுண்டமணி... போலீசில் புகார்!
எத்தனை முறை சொன்னாலும் அடங்காமல் கிளம்பி விடுகிறார்கள் வதந்தி பரப்புவோர்... அதுவும் காமெடி கிங் கவுண்டமணி உடல்நிலை குறித்து.
இந்த ஆண்டு மட்டும் மூன்றாவது முறையாக கவுண்டர் உடல் நிலை குறித்து கண்டபடி சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பிவிட்டார்கள்.
இதைத் தொடர்ந்து அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கவுண்டமணி சார்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கவுண்டமணியின் வழக்குரைஞர் கே.சசிக்குமார், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த மனுவில், "கவுண்டமணி கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக சில நாள்களாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்தத் தகவலைப் பார்த்து கவுண்டமணியின் நண்பர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதனால் கவுண்டமணியும், அவர் குடும்பத்தினரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே காவல்துறை இப்படிப்பட்ட வதந்திகளைத் தடுக்க வேண்டும். மேலும் இந்த வதந்தியை பரப்புவோர் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.