அண்ணன் நிலத்தை "திருடிய" ஆறுக்குட்டிக்கு மீண்டும் "சீட்" கொடுத்த ஜெயலலிதா!
கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டசபைத் தொகுதி வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏவான விசி ஆறுக்குட்டி.
இவர் மீது தொகுதியில் ஏகப்பட்ட அவப் பெயர்கள், புகார்கள், குற்றச்சாட்டுகள் குவிந்து கிடக்கின்றன. இருப்பினும் சீட் பெற்று விட்டார் ஆறுக்குட்டி.
உச்சகட்டமாக சமீபத்தில்தான் இவர் மீது இவரது அண்ணனே நில அபகரிப்பு வழக்கை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தாக்கல் செய்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
கோவைக்காரர்
கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுக்குட்டி. ஊராட்சி மன்றத் தலைவராக அரசியலில் அடியெடுத்து வைத்தவர். இன்று இவர் கோவை மாவட்டத்திலேயே மிக மிகப் பெரிய பணக்கார அதிமுக பிரமுகராக மாறி நிற்கிறார்.
கவுண்டம்பாளையம்
கோவை மாவட்டத்திலேயே பெரிய தொகுதி கவுண்டம்பாளையம் தொகுதிதான். அதன் சட்டசபை உறுப்பினராக இருந்து வருபவர் ஆறுக்குட்டி.
வாக்குறுதிகளை மறந்தவர்
எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பும், பின்னரும் பல உறுதிமொழிகளை அளித்திருந்தார் ஆறுக்குட்டி. ஆனால் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள்.
நில அபகரிப்பு விவகாரம்
இவர் மீது சொந்த அண்ணனே சமீபத்தில் நில அபகரிப்பு புகாரைக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது அண்ணன் வி.சி. வேலுச்சாமி. இவர் கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்து ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்குச் சொந்தமான 38 சென்ட் நிலம் காலப்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை எனது தம்பி ஆறுக்குட்டி, போலியான ஆவணம் மூலம் பொன்னுச்சாமி என்பவருக்கு ரூ. 2 கோடிக்கு விற்று மோசடி செய்து விட்டார். இந்த நிலத்தை மீட்டு என்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் வேலுச்சாமி.
மீண்டும் வெல்வாரா?
இப்படி வில்லங்கமான பின்னணி உள்ள போதிலும் இவருக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது. பார்க்கலாம், மீண்டும் வெற்றிக் கனியைப் பறிப்பாரா ஆறுமுகக் குட்டி என்பதை.