7 பேர் விடுதலை விவகாரம்.. ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்.. ஜெயக்குமார் நம்பிக்கை!!
7 பேர் விடுதலை விவகாரம் தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: 7 பேர் விடுதலை விவகாரம் தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டு ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
அமைச்சரவை முடிவு எடுத்தது எடுத்ததுதான்; அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. நேற்று, இன்று, நாளை என்று தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதே திமுகவின் கொள்கை.
7 பேர் விடுதலை விவகாரம் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும். தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.