பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிறுத்தி வைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை நிறுத்தி வைக்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை விலையை உயர்த்தும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த, 2014க்குப் பிறகு, தற்போது மிகவும் அதிகபட்சமாக, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 70 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியா, தனது பெட்ரோல், டீசல் தேவையில், 80 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது.
தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது இவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.73.98ஆக உள்ளது. டீசல் விலை ரூ.64.96ஆக உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.76.75 மற்றும் டீசல் விலை ரூ.68.53ஆக உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி 2014 நவம்பரில் இருந்து, 2016 ஜனவரி வரி 9 முறை உயர்த்தப்பட்டது. ஒரு முறை மட்டும் ரூ.2 குறைத்தது. ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை விலையை மாற்றி அமைக்கும் நடைமுறை, கடந்தாண்டு ஜூனில் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக சர்வதேச விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இவற்றின் மீதான வரியைக் குறைக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை,. ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் நடவடிக்கைகளை தற்காலிக நிறுத்தி வைக்கும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், சர்வதேச விலைக்கு ஏற்ப ஏற்படும் இழப்பை ஏற்றுக் கொள்ளும்படியும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.