பயனாளிகளின் ரகசியத்தை வெளியிட கோரிய மத்திய அரசு.. விடாப்பிடியாக மறுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம்
வாட்ஸ் ஆப்பில் உள்ள எண்டு- எண்டு என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு முறையை நீக்கும்படி மத்திய அரசு வைத்த கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிராகரித்து இருக்கிறது.
சென்னை: வாட்ஸ் ஆப்பில் உள்ள எண்டு- எண்டு என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு முறையை நீக்கும்படி மத்திய அரசு வைத்த கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிராகரித்து இருக்கிறது.
இந்தியாவில் குழந்தை கடத்தல் வதந்தி பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதனால் இதுவரை மட்டும் 33 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த வாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் நிறைய முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் கூட வாட்ஸ் ஆப் வதந்தி பிரச்சனை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
எத்தனை முறை
இதற்காக வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. பார்வேர்ட் மெசேஜ்களை கண்டுபிடிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும். புகைப்படம் , வீடியோ, எதுவாக இருந்தாலும் ஐந்து முறை மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும்.
எண்டு- எண்டு என்கிரிப்ஷன் என்றால் என்ன
எண்டு- எண்டு என்கிரிப்ஷன் என்ற வசதி வாட்ஸ் ஆப்பில் சில வாரங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. மக்களின் பாதுகாப்பும் கருதியும், அந்தரங்கம் கருதியும் இந்த வசதி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாம் அனுப்பும் மெசேஜ்களை நாம் அனுப்பிய நபரை தவிர வேறு யாரும் இடையில் ஹேக் செய்து படிக்க முடியாது. வாட்ஸ் ஆப் நிறுவனம் கூட படிக்க முடியாது.
கோரிக்கை வைத்தது
இந்த நிலையில் இந்த குழந்தைகள் கடத்தல் வதந்தியை கண்டுபிடிக்க மத்திய அரசு ஒரு திட்டமிட்டது. அதன்படி, வாட்ஸ் ஆப் , இந்த எண்டு- எண்டு என்கிரிப்ஷன் வசதியை எடுத்துவிட வேண்டும். அந்த வசதியை கைவிட்டால் யார், யாருக்கு இந்த குழந்தை கடத்தல் மெசேஜை அனுப்புகிறார்கள் என்று மத்திய அரசால் கண்டுபிடிக்க முடியும் என்று கூறியது.
வாட்ஸ் ஆப் மறுப்பு
ஆனால் இதற்கு தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இது மக்களின் அந்தரங்கத்தை பாதிக்கும் என்று கூறியுள்ளது. இதனால் அந்த குறிப்பிட்ட வதந்தி மெசேஜ் மட்டுமில்லாமல் எல்லா மெஸேஜையும் மத்திய அரசு படிக்க முடியும், இது மக்களுக்கு எதிரானதாக அமையும் என்று வாட்ஸ் ஆப் விளக்கம் அளித்துள்ளது.