மெரீனாவில் போராட அனுமதியில்லை - டிராபிக் ராமசாமி மனுவுக்கு அரசு பதில்
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது. மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று கூறியுள்ளது.
84 வயதாகும் டிராபிக் ராமசாமி, பல்வேறு சமூக நல போராட்டங்களை நடத்தியுள்ளார். அதிமுக, திமுக அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருபவர் டிராபிக் ராமசாமி. தள்ளாத வயதிலும் தளராமல் போராடி வருகிறார்.
மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், பாதுக்கப்பட்ட சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது.
மெரினாவில் காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த அனுமதி கேட்டு டிராஃபிக் ராமசாமி மனுதாக்கல் செய்திருந்தார்.
இதற்கு அனுமதி தர அரசு மறுத்துவிட்டது. அப்போது வழக்கு விசாரணையின் போதே டிராபிக் ராமசாமி மயங்கி விழுந்தார்.
கடந்த ஆண்டு திருப்பூரில் போராட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார். இதனால் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.
கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதய பகுதியில் உள்ள சிறு கோளாறு காரணமாக அவர் அடிக்கடி மயங்கி விழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.