ஓடும் பேருந்தில் மாரடைப்பு.. பஸ்சை நிறுத்தி 40 பயணிகளின் உயிரை காத்து உயிரிழந்த டிரைவர்!
கள்ளகுறிச்சி: சங்கராபுரம் அருகே தன் உயிரை துச்சமாக நினைத்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, தேவபாண்டலம் பள்ளிவாசல் அருகில் வந்தபோது, பேருந்தின் ஒட்டுநர் பாண்டியனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பதற்றத்திற்கு ஆளாயினர்.
இதனையடுத்து தனது உயிரைப் பொருட்படுத்தாத, பேருந்து ஒட்டுநர் பாண்டியன், பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி பேருந்தில் இருந்த 40 பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார். சிறிது நேரத்தில் பாண்டியனின் உயிர் பிரிந்தது.
பின்னர் பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாண்டியனின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர்.
தனக்கு மாரடைப்பு ஏற்பட்டபோதும், பேருந்திலிருந்த 40 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த ஓட்டுநர் பாண்டியனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.