ஒன்னப்பன் சார்.. இதெல்லாம் உங்களுக்கு தேவையா??
Recommended Video
கிருஷ்ணகிரி: கண்டக்டர் வேலை என்றால் அதை மட்டும் பார்க்காமல், மற்ற காரியங்களிலும் ஈடுபட்டால் இப்படித்தான் நடைபெறும்.
போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தை சேர்தவர் சுரேந்திரன். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் பயின்று வருகிறார். இவர், எப்போதும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு சந்தூர் கிராமத்திற்கு 34-ம் எண் பஸ்சில்தான் ஏறுவார். நேற்றும் அப்படித்தான் கல்லூரி முடித்துவிட்டு இந்த பஸ்ஸில் ஏறி முன்பக்க சீட்டில் உட்கார்ந்துள்ளார்.
மொதல்ல எழுந்திரு
அப்போது அங்கு வந்த கண்டக்டர் ஒன்னப்பன் என்பவர், "முதல்ல இந்த சீட்டிலிருந்து எழுந்திரு. வழக்கமா உட்கார ஒருத்தருக்காக இந்த சீட்டில் இடம் பிடிச்சி வச்சிருக்கேன். நீ போய் வேற எங்காவது உட்கார்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு மாணவரும், நான் ஏன் வேற இடத்தில் உட்காரணும்? சீட் எல்லாருக்கும் பொதுதானே? என்று சொல்லி எழ மறுத்துள்ளார்.
வம்படியாக இறக்கினர்
இதனால் வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது. எவ்வளவு சொல்லியும் மாணவர் சீட்டை விட்டு எழாதால், உடனே கண்டக்டர் தனது வேலையை காட்ட துவங்கியுள்ளார். அங்கிருந்த போக்குவரத்து காவலரை உதவிக்கு அழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த மாணவரை பஸ்ஸிலிருந்தே வம்படியாக இறக்கவிட்டுள்ளனர்.
அவமானத்தில் மாணவர்
படிக்கும் இளம் வயது மாணவனுக்கோ இது மிகவும் அவமானமாக போய்விட்டது. எல்லார் முன்னாலேயும் நம்மை இப்படி எந்த தப்பும் செய்யாமல் கண்டக்டர் இறக்கிவிட்டு விட்டாரே என்று குடும்பத்தினர், மற்றும் தனது சக நண்பர்களிடம் செல்போனில் கூறினார்.
சாலைமறியலில் உறவினர்கள்
இதையடுத்து சுமார் 100த்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாணவனின் உறவினர்களும் ஒன்று கூடி பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் இறங்கினர். பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். விபரம் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டதை கலைத்தனர்.
இதெல்லாம் தேவையா?
ஒரு அரசு ஊழியரான கண்டக்டருக்கு இதெல்லாம் தேவைதானா? வரப்போகும் ஒருவருக்காக இடம் பிடித்து வைப்பது இவரது வேலையா என்ன? எல்லா பயணிகளையும் ஒரே மாதிரியாகதானே கண்டக்டர்கள் நடத்த வேண்டும்? சிறப்பு சலுகை, தனிப்பட்ட கரிசனம் இதில் என்ன வேண்டி கிடக்கு? இதெல்லாம் ஒரு விஷயம் என்று துணைக்கு மற்றொரு அரசு ஊழியரான போக்குவரத்து காவலரையும் கூப்பிட்டு வந்து சின்ன வயது பிள்ளையிடம் தன் வீரத்தையும், அதிகாரத்தையும் காட்ட வேண்டுமா? ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் 19 வயது மாணவனிடம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது 52 வயது கண்டக்டருக்கு சரிதானா என்பதை அவரே மனசாட்சியை தொட்டு பதில் சொல்லட்டும்.