நெல்லையில் ரவுடி ராக்கெட் ராஜாவை விடுவிக்க கோரி அரசு பஸ் எரிப்பு.. பரபரப்பு
ராக்கெட் ராஜாவை விடுவிக்க கோரி வன்முறையில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை: நெல்லையில் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜவை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் அரசு பேருந்து ஒன்றினை எரித்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு தழையூத்துக்கு அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென வழிமறித்தனர். இதனால் ஓட்டுனர் பேருந்தை ஓட்டமுடியாமல் நிறுத்திவிட்டார்.
பேருந்தினுள் அதிரடியாக ஏறிய இரண்டு பேரும், பயணிகளையும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பேருந்தில் இறங்குமாறு கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் பேருந்திலிருந்து கீழே இறங்கினர். இதனைத் தொடர்ந்து மர்மநபர்கள் இரண்டு பேரும் பேருந்துக்கு நெருப்பு கொளுத்தினர்
பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜாவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் பேருந்தில் குபுகுபுவென பற்றி எரிந்த நெருப்பினை அணைத்தனர்.
ஆனால் பேருந்து முழுவதுமாக பற்றி எரிந்து கருகியது. அரசு பேருந்தினை எரித்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். நகரின் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த பேருந்து எரிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.