இந்த அரசாணையை அப்பவே வெளியிட்டிருந்தால் 13 அப்பாவி உயிர்கள் தப்பியிருக்குமே
ஸ்டெர்லைட் ஆலையை அப்போதே மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தால் 13 உயிர்களை காப்பாற்றியிருக்கலாமே.
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையை அப்போதே வெளியிட்டிருந்தால் 13 அப்பாவி உயிர்களை காப்பாற்றியிருக்கலாமே.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயு கசிவு கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ஏற்பட்டது. இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து அந்த ஆலையை தமிழக அரசு மார்ச் 29-இல் மூடியது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தது. இதையடுத்து அந்த ஆலை இயங்குவதற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. பசுமை தீர்ப்பாயம் அனுமதிக்கு எதிரான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
பேரணி
தூத்துக்குடியில் இந்த ஆலையால் விவசாயம் , நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு உடல்நிலையும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் மக்கள் பேரணி நடத்தினர்.
13 பேர் பலி
இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் கேட்காததால் துப்பாக்கியை பிரயோகம் செய்தனர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக உள்ளது.
உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டதாக அரசாணையில் உள்ளது.
13 உயிர்கள் தங்கியிருக்கும்
இதுபோன்ற ஒரு முடிவை 100 நாட்களுக்கு முன்னரே எடுத்திருக்கலாம். காலம் கடந்த எடுக்கப்பட்ட முடிவால் 13 பேரின் உயிர்கள் பறிபோயுள்ளன. பல ஆயிரம் துயரங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை தவிர்த்திருக்கலாம். தூத்துக்குடி மீது ரத்த களறி ஏற்படாமல் இருந்திருக்கும். மக்களும் தங்கள் வேதனையை தவிர்த்துவிட்டு அவரவர் வேலையை பார்த்திருப்பர். எந்த பிரச்சினையாக இருந்தாலும் உயிர் பலி இருந்தால் மட்டுமே நடவடிக்கை இருந்தால் எப்படி. இதுதான் கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்.