அரசு டாக்டராக இருந்து அரசியல்வாதியான அமைச்சர் சரோஜா... லஞ்சம் கேட்டு மாட்டிய பின்னணி
அரசு டாக்டராக இருந்து அமைச்சரான டாக்டர் சரோஜா இப்போது அரசு அதிகாரியிடம் ரூ.30 லட்சம் லட்சம் லஞ்ச கேட்டதாக பரபரப்பு புகாரில் சிக்கியுள்ளார்.
சென்னை: சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது லஞ்சப் புகார் எழுந்துள்ளது. தருமபுரியில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டதற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டார் என்று பரபரப்பு புகார் கூறியுள்ளார் மீனாட்சி என்ற அதிகாரி. அமைச்சர் சரோஜா யார்? அவரது பின்னணி என்று பார்த்தாலே அவர் அமைச்சரான பின்னர் கடந்த சில மாதங்களில் அவர் செய்த தில்லுமுல்லுகள் தெரிந்து விடும்.
சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சரோஜா, ஒரு டாக்டர். எம்.டி. டி.ஜி.ஓ. படித்தவர். 1976 முதல் அரசு மருத்துவமனையில் பணியாற்றி பின் 1988 முதல் 1991 வரை மகப்பேறு மருத்துவராக சவுதி அரேபியாவில் பணியாற்றியவர்.
அதிமுக உறுப்பினர்
1989ஆம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினராக இணைந்த அவரது வளர்ச்சி அதிரடியாகவே இருந்துள்ளது. 68 வயதாகும் சரோஜா, ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரான 1991-1996 ஆண்டு கால கட்டத்தில் சங்ககிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
டெல்லி போன சரோஜா
1998-1999 ராசிபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாக டெல்லி சென்றார். 1999-2004 ராசிபுரம் ராஜ்யசபா உறுப்பினராக மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. சரோஜாவை அ.தி.மு.க. ராஜ்யசபா தலைவராக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா.
பதவி கொடுத்த ஜெயலலிதா
அ.தி.மு.க. கூட்டுக்குழு துணைத்தலைவர், 2004-2006 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய தலைவர், 2012-2013 தமிழ்நாடு தகவல் ஆணையர் ஆகிய பதவிகளை சரோஜாவிற்கு கொடுத்தார் ஜெயலலிதா. இன்றைக்கு அதே ஜெயலலிதாவை ஏக வசனத்தில் அவள், இவள் என்று பேசி அவமானப்படுத்துகிறார்.
ஆடிய ஆட்டம் என்ன?
2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, ராசிபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் சரோஜா. அமைச்சரானார். கடந்த 1 ஆண்டு காலத்தில் இவர் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி விட்டார் என்கின்றனர்.
எல்லாமே காசுதான்
சத்துணவு பணியாளர்கள் நியமனம் தொடங்கி சமூக நலத்துறையில் எப்படி எல்லாம் காசு பார்க்க வேண்டுமே அதை துல்லியமாக கணக்கு போட்டு காசு பார்த்து விடுவாராம். ஒரு சத்துணவு பணியாளருக்கு இரண்டரை லட்சம் காசு பார்த்து விடுவாராம். இப்போது சரோஜா என்ற பூனைக்கு முதன் முதலாக மணி கட்டியிருக்கிறார் மீனாட்சி. இன்னும் எத்தனை பேர் லஞ்சப் புகாருடன் கிளம்பப் போகிறார்களோ?