கிருஷ்ணகிரியில் ஜிகா வைரஸ்... வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும் சுகாதாரக் குழு: வீடியோ
கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்ராம்பாளையம் ஊராட்சியில் ஜிகா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுகாதாரக் குழுவினர் அங்கு வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்ராம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் ஜிகா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரக் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பெயர் தெரியாத மர்மக் காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக டெங்கு, ஜிகா வைரஸ் காய்ச்சல் குறித்த அச்சம் மக்களிடம் உள்ளது. கடந்த ஆண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவடங்களில் டெங்குக் காய்ச்சலுக்கு பலர் பலியாகினர். அதில் பெரும்பாலானோர் பள்ளி சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாட்ராம்பாளையம் ஊராட்சியில் உள்ள பல கிராமங்களில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. அதில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து 6 மருத்துவர்கள், 12 மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ சிறப்புக் குழு நாட்ராம்பாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது. அதனை மாவட்ட ஆட்சியர், கதிரவன் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
மேலும், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொசு மருந்து அடித்து வருகின்றனர். மேலும் கொசு உற்பத்தியாகாமல் இருக்க வழிமுறைகளையும் சொல்லி வருகின்றனர்.