கோர்ட் தடையைப் புறக்கணித்து ஜாக்டோ ஜியோ தொடர்ந்து போராட்டம்.. நீட்டை ரத்து செய்யக் கோரிக்கை!
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 4வது கோரிக்கையாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4வது கோரிக்கையாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
அஞ்சப்போவதில்லை
தமிழக அரசு ஒரு லட்சம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் நோட்டீஸ் அனுப்பினாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை என்று கூறியுள்ளனர். எஸ்மா, டெஸ்மாவையே பார்த்தவர்கள் நாங்கள், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.
தடை விதிக்கக் கூடாது
உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு தலைவர் மாயவன் கூறியுள்ளார். அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டத்துக்கு தடை விதிக்க கூடாது, எங்களது கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
போராட்டம் தீவிரமடையும்
மேலும் நாளை சென்னையில் மறியல் போராட்டம் நடைபெறும், நாளை போராட்டம் தீவிரம் அடையும் என்றும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு தலைவர் மாயவன் தெரிவித்துள்ளார். நோட்டீஸ் அனுப்பினாலும் அஞ்சப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்
மதுரை, விருதுநகர், தஞ்சை, நெல்லை, சேலம் என தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பணிகள் முடங்கியுள்ளன. காலாண்டு தேர்வு நடைபெறும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.