போலீஸாரின் சம்பளத்த உயர்த்த சொன்னா... எம்எல்ஏ-க்களின் சம்பளத்த உயர்த்திட்டீங்களே எஜமான்
காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது காவல்துறையினர் அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றான ஊதிய உயர்வை தராமல் எம்எல்ஏ-க்களின் ஊதியத்தை அரசு உயர்த்தி சுயநலம் கண்டுள்ளது.
சென்னை: காவல் துறையினர் தங்களுக்கு ஊதிய உயர்வு கோரி நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் எம்எல்ஏ-க்களின் ஊதியத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த 6-ஆம் தேதி காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காவல் துறையின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க போலீஸாரி்ன் குடும்பத்தினர் சட்டசபையை முற்றுகையிட்டனர்.
கோரிக்கைகள்
8 மணி நேர வேலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். தினமும் இதைவிட கூடுதலாக பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும். மற்ற அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்க வேண்டும். பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழக போலீஸாருக்கு ஊதியம் குறைவு. வார விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பிற அரசு ஊழியர்களுக்கெல்லாம் விடுப்பு எடுப்பது சாதாரண விஷயம். பகலில் வேலை பார்ப்பவரையே இரவும் வேலை பார்க்க வைப்பது கூடாது. இதில் சுழற்சி முறைதேவை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை குடும்பத்தினர் முன் வைத்தனர்.
எதிர்பார்ப்பு
சட்டசபையை முற்றுகையிட்டதால் காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது ஏதேனும் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலீஸார் கோரிக்கைகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.
எம்எல்ஏ-க்களுக்கு ஊதியம் உயர்வு
தொகுதிக்கே செல்லாமல் தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் கேட்டுக் கொள்ளாமல், மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் சுயநலத்துடன் ஊழிலில் திளைத்துள்ள எம்எல்ஏ-க்களின் சம்பளம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. குழந்தைகள் தூங்கியபிறகு வீட்டுக்கு வருவதும், அவர்கள் எழுவதற்கு முன்னரே டூட்டிக்கு கிளம்பதும்தான் போலீஸாரின் அன்றாட பணி. மற்ற கோரிக்கைகளைக் காட்டிலும் இவர்களின் சம்பளத்தை உயர்த்தியிருந்தால் சற்று ஆறுதலாக இருந்திருக்குமே என்பது தான் அக்குடும்பத்தினரின் ஆதங்கம்.
மக்களின் வரி பணம்
மக்களின் வரி பணத்தை மக்களுக்கும், மக்கள் சேவையாற்றுவோருக்கும் தராமல் எந்த வித செயலையும் செய்யாமல் லஞ்சம் , கட்டபஞ்சாயத்து, அரசின் குறையை சுட்டிக் காட்டினால் மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு வழங்கினால் எப்படி. ஒரு ஆண்டுக்கு ஒரு எம்எல்ஏ-வுக்கு ரூ.12 லட்சம் என்றால் மீதமுள்ள 4 ஆண்டுகளில் ரூ. 48 லட்சம். இதுதவிர மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம், கட்டப்பஞ்சாயத்து, கமிஷன், தொகுதி மேம்பாடு கமிஷன், டெண்டர், அது, இது என 10 தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடும் அளவுக்கு பணம் சேர்ந்துவிடும் போல. அரசியலுக்கு வர எழுத்து தேர்வு வைத்தால் எப்படியிருக்கும். வேலையில்லா திண்டாட்டம் தலைதெறிக்க ஓடிவிடுமே.