அரசு செயல்படுகிறதா இல்லையா...? சிலை பாதுகாப்பு குறித்து சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி
சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அரசு தவறி வருவதாக குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், அரசு செயல்படுகிறதா இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மாயம் மற்றும் தங்கமில்லாத சிலை செய்து மோசடி உள்ளிட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு செயல்படுகிறதா இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அரசு சார்பாக சிலை கடத்தல்தடுப்பு போலீசாருக்கு முறையான உதவிகள் செய்யப்படவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவரது தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உரிய வசதிகளை செய்து தரும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை தாக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை. தமிழக அரசு செயலிழந்து விட்டதா? உத்தரவுகளை நிறைவேற்றாமல் நீதிமன்றத்தோடு விளையாடாதீர்கள்.
ஜூலை மாதம் பிறப்பித்த 21 உத்தரவுகளை அறநிலையத்துறை ஆணையர் ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை? ஒரு சிலை செய்ய 40 ஆண்டுகள் வேண்டும் என்ற ரத்தக்கண்ணீர் வரலாறு உங்களுக்கு தெரியாதா?" என நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தொடர்ந்து, "2 வாரத்திற்குள் இதை சரிசெய்யாவிட்டால் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும். மேலும் தமிழக தலைமை செயலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்" என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.