தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : பொதுமக்களின் மீதான அப்பட்டமான படுகொலை - அன்புமணி ராமதாஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பொதுமக்களின் மீதான அப்பட்டமான படுகொலை எண்ணத்தோடு நடத்தப்பட்டு இருக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை அப்பட்டமான படுகொலையை அரங்கேற்றி இருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இதனால் தமிழகத்தில் மிகுந்த கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை அப்பட்டமான வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
இனியும் எந்த மக்கள் போராட்டமும் நடக்கக்கூடாது என்பதற்காகவும், மக்களை மிரட்டுவதற்காகவும் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. இன்னொரு போபால் விஷவாயு சம்பவம் தமிழகத்தில் நடைபெற அரசு அனுமதிக்கக்கூடாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.